ஜூன் முதல் வாரத்துக்குள் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் புத்தகங்கள்
விநியோகம் செய்யப்பட்டுவிடும் என்று தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வட்டாரங்கள்
தெரிவித்தன. பிளஸ் 2மாணவர்களுக்காக இந்த ஆண்டு மொத்தம் 93 லட்சத்து 78
ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. இதில் 80 சதவீத புத்தகங்கள்
முழுவதுமாக அச்சிடப்பட்டுள்ளன. தாவரவியல், விலங்கியல் போன்ற சில
பாடங்களுக்கான புத்தகங்கள் மட்டும் இன்னும் தயாராகவில்லை. கணிதம்,
இயற்பியல், வேதியியல், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கான புத்தகங்கள்
அச்சிடப்பட்டுள்ளதால், அவை தனியார் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு
வருகின்றன. வரும் 30-ஆம் தேதிக்குள் அனைத்துப் புத்தகங்களும் அச்சிடப்பட்டு
மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுவிடும் என்று அந்த வட்டாரங்கள்
தெரிவித்தன. வரும் கல்வியாண்டின் (2013-14) முதல் பருவத்தில் மொத்தம் 5.34
கோடி புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன. இவற்றில் தற்போது 78 சதவீத
புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயாராக உள்ளன. தனியார் பள்ளிகளுக்கான
புத்தகங்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்துக்குச் சொந்தமான 22 விற்பனைக்
கிடங்குகளிலும், அரசுப் பள்ளிகளுக்கான இலவசப் புத்தகங்கள் அந்தந்த
மாவட்டங்களில் உள்ள மையங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு
புத்தகங்கள ்: இந்த ஆண்டு பத்தாம் வகுப்புக்காக 67 லட்சத்து 76 ஆயிரம்
புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்புக்கு 100 சதவீத
புத்தகங்களும் அச்சிடப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிகளுக்கும் புத்தகங்கள்
விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மொத்தப் புத்தகங்களில் 51 லட்சத்து 70
ஆயிரம் புத்தகங்கள் இலவசப் புத்தகங்கள் ஆகும். 16 லட்சத்து 6 ஆயிரம்
புத்தகங்கள் விற்பனைக்கான புத்தகங்கள் ஆகும். முதல் பருவப் புத்தகங்கள்: 1
முதல் 5-ஆம் வகுப்பு வரை முதல் பருவத்துக்கான புத்தகங்கள் 98 சதவீதம்
அச்சிடப்பட்டுள்ளன. 6, 7, 8, 9 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவப்
புத்தகங்கள் 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை அச்சிடப்பட்டுள்ளன. பிளஸ் 1
தவிர மீதமுள்ள அனைத்து வகுப்புகளுக்கான புத்தகங்களும் வருகிற 25-ஆம்
தேதிக்குள் அச்சிடப்பட்டுவிடும். மே 30-ஆம் தேதிக்குள் இவை அனைத்து
மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு பள்ளி திறக்கும்நாளில்
மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக வட்டாரங்கள்
தெரிவித்தன.
No comments:
Post a Comment